திருவாரூர், ஜன.11: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி திருவாரூரில் நேற்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பேரணி, பிரசாரத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நீதி கேட்டு நெடும்பயணம் நிகழ்ச்சியானது பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான தமிழக காவிரி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் நேற்று முன்தினம் நாகை மாவட்டத்திலும், நேற்று திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து பேரணியானது துவங்கி பனகல் சாலை வழியாக பழைய பஸ் நிலையத்தை அடைந்து அங்கு பிரசார இயக்கம் நடைபெற்றது.