20 ஆண்டுகளாக தன்வசம் இருந்த உள்துறையை பா.ஜவுக்கு ஒதுக்கினார் நிதிஷ்குமார்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 20 ஆண்டுகளாக தன்வசம் வைத்து இருந்த உள்துறையை தற்போது பா.ஜவுக்கு ஒதுக்கி உள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தேசியஜனநாயக கூட்டணி அரசு, முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் மீண்டும் நேற்று முன்தினம் பதவி ஏற்றது. 26 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். நேற்று அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தன்வசம் வைத்திருந்த உள்துறையை, இந்த முறை துணைமுதல்வரும், பா.ஜவை சேர்ந்த மூத்த தலைவருமான சாம்ராட் சவுத்ரிக்கு, நிதிஷ்குமார் வழங்கி உள்ளார். முதல்வர் நிதிஷ் குமார் பொது நிர்வாகத் துறை, அமைச்சரவை செயலகம் மற்றும் கண்காணிப்புத் துறை ஆகிய துறைகளை தன்னிடமே வைத்துள்ளார். பா.ஜ வசம் இருந்த நிதித்துறை, இந்த முறை நிதிஷ்கட்சியின் மூத்த தலைவர் பிஜேந்திர பிரசாத் யாதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜவை சேர்ந்த மற்றொரு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா ​​வருவாய் மற்றும் நில சீர்திருத்தங்கள் மற்றும் சுரங்கம் மற்றும் புவியியல் துறைகளைப் பெற்றுள்ளார்.

Related Stories: