லாரி டிரைவர் வீட்டில் 16 சவரன், 66 ஆயிரம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை: திருவண்ணாமலையில் துணிகரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் லாரி டிரைவர் வீட்டின் பூட்டு உடைத்து 16 சவரன் நகைகள் மற்றும் ₹66 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வா நகரை சேர்ந்தவர் சிலம்பரசன்(30). லாரி டிரைவர். அவரது மனைவி ராதிகா. நேற்று முன்தினம் வழக்கம்போல் சிலம்பரசன் வேலைக்கு சென்றிருந்தார். அவரது மனைவி ராதிகா பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். எனவே, 2 நாட்களாக வீடு பூட்டப்பட்டிருந்தது.

அதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டின் பூட்டு உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேலும், அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 16 சவரன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள், 66 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்த தகவலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலம்பரசனுக்கு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக, திருவண்ணாமலை கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், ஏஎஸ்பி கிரண்சுருதி மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனாலும், எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்டு, இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த பகுதியில் அடுத்தடுத்து நடைபெறும் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: