சாலையில் தவித்த முதியவர் மீட்பு

திருத்தணி: தினகரன் செய்தி எதிரொலியாக கலெக்டர் பொன்னையாவின் உத்தரவின்பேரில் அனாதையாக கிடந்த முதியவர் மீட்கப்பட்டு சொந்தவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் நாகால் அம்மன் நகர், பங்காரு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(69). கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவருடைய மனைவி காலமாகிவிட்டார்.  குழந்தைகள் இல்லை. சக்திவேலின் சொந்தங்கள் சொத்துக்களை பிடுங்கிவிட்டு அவரை விரட்டியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சக்திவேல், திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் சாலையின் ஓரம் உணவின்றி தவித்து வந்தார். இது குறித்து தினகரன் நாளிதழில் ேநற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து கலெக்டர் பொன்னையாயின் உத்தரவின்பேரில் திருத்தணி வட்டாட்சியர் உமா, திருத்தணி வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் துரைக்கண்ணு ஆகியோர் நேரில் சென்று முதியவருக்கு உணவு, உடை கொடுத்து அவரை மீட்டு ஆட்டோ மூலம் சொந்தவூருக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: