அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எல்லாமே பேப்பர் அளவில்தான் உள்ளது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

திண்டுக்கல், ஜன. 1: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நேற்று  திண்டுக்கல் வருகை தந்தனர். தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் ரவுண்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்குழுவில் எம்பிக்கள் திருச்சி சிவா எம்பி, டி.கே.எஸ் இளங்கோவன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கூட்டத்தில் திண்டுக்கல் நகர் வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், தோல் வர்த்தகர் சங்கம், விவசாயிகள் சங்கம், ரியல்எஸ்டேட் சங்கம் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். பின்னர் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திமுக சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் இம்முறை நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு 4 மடங்கு அதிகளவில் பொதுமக்கள் வருகின்றனர். இதனாலே ஆளும் அதிமுகவினர் பயப்படுகின்றனர். அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சி செய்து ஏதாவது உருப்படியான ஒரு திட்டத்தை செய்துள்ளனரா. எதுவும் கிடையாது. எல்லாமே பேப்பர் அளவில்தான் உள்ளது’ என்றார். இதில் மாநில துணை பொது செயலாளர் ஐ.பெரியசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் ஐபி.செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி, எம்எல்ஏ ஆண்டிஅம்பலம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: