காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டையில், அரசு அமைத்த பொதுப்பாதையை, போலீஸ்காரர் ஆக்கிரமித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, அப்பகுதியை மீட்க வேண்டும் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம், பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை மேட்டு தெருவில் 57 வீடுகள் உள்ளன. இந்த தெருக்கோடியில் படவேட்டம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு வடக்கு, தெற்கு என இருபுறமும் அரசால் போட்ட சிமென்ட் சாலையில் குடியிருப்புகள் உள்ளன. இந்த பாதை வழியாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் சென்று வருவதுடன், அம்மன் கோயிலை சுற்றி வருவதற்கும் பயன்படுத்துகிறார்கள். மேலும் மேய்ச்சலுக்கு கால்நடைகளையும் இந்த வழியாக ஓட்டிச் செல்கின்றனர்.