பொன்னமராவதி, அக். 29: பொன்னமராவதி அருகே மரவாமதுரையில் தேசிய வங்கி துவங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி ஒன்றியத்தில் அதிக கிராமங்கள் மற்றும் அதிக மக்கள் தொகை உள்ள மரவாமதுரை ஊராட்சி.இந்த ஊராட்சியில் சடையம்பட்டி, மரவாமதுரை, கங்காணிப்பட்டி, சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, உடையாம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளது.
இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை பெறுவோர், 100நாள் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு வகையான தங்களின் வங்கிச்சேவைக்கு காரையூர், நகரப்பட்டி, பொன்னமராவதி ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும நிலையுள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று வரவேண்டிய நிலையுள்ளது. எனவே 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மரவாமதுரையில் தேசிய வங்கி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
