நாகர்கோவில், டிச.31: நாகர்கோவில் அருகே வாத்தியார்விளை பகுதியில் புதிதாக வழிபாட்டுத்தலம் கட்டி வருகின்றனர். இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் வடசேரி காவல் நிலையம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் புகார் தெரிவித்ததின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ.விடம் கடந்த 4ம் தேதி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்கவில்லை.
தற்போது அந்த இடத்தில் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள குமரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி நாகர்கோவில் கிழக்கு மாநகர தலைவர் மகராஜன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் மிசா சோமன், மாவட்ட தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் நம்பிராஜன், அமைப்பாளர் சங்கர் உள்ளிட்டோர் பேசினர். முருகன், பிரபஞ்சன், மணிகண்டன், ராஜேஷ், சுதர்சனன், ஜெயபிரகாஷ், பாஜ செய்தி தொடர்பாளர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.