நியூயார்க்: இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தானால் வெற்றி பெற முடியாது என்று சிஐஏ முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ கூறினார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஜான் கிரியாகோ கூறியதாவது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு உண்மையான போர் நடந்தால் எந்த நன்மையும் ஏற்படாது. ஏனெனில் பாகிஸ்தான் அதில் தோற்கும். நான் அணு ஆயுதங்களைப் பற்றி பேசவில்லை. வழக்கமான போரைப் பற்றி பேசுகிறேன். இந்தியர்களை தொடர்ந்து ஆத்திரப்படுத்துவதால் பாகிஸ்தானுக்கு எந்த பலனும் இல்லை.
பாகிஸ்தானின் அணு ஆயுதத்தை அமெரிக்காவின் பென்டகன் கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானுடனான எங்கள் உறவு சிறப்பானதாக இருந்தது. பாகிஸ்தானை ஆட்சி செய்த முஷாரப், அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் வந்தார். உண்மையை கூற வேண்டும் என்றால் சர்வாதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா எப்போதும் விரும்பும். ஏனென்றால் அப்போதுதான், பொது மக்கள் கருத்து மற்றும் மீடியா பற்றி எந்த கவலையும் இருக்காது. இதனால் முஷாரப்பை நாங்கள் வாங்கினோம். பாகிஸ்தானுக்கு ராணுவம் அல்லது பொருளாதார ரீதியில் கோடிக்கணக்கான அளவுக்கு கடன் கொடுத்தோம். முஷாரப்பை அடிக்கடி சந்தித்ததுடன், அவர் வேண்டியதை செய்தும் கொடுக்கப்பட்டது. அதனால் அந்நாட்டு அணு ஆயுதக் கிடங்கின் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்தார்.
அவர், தனது ராணுவத்தை மகிழ்ச்சியாக வைத்து கொண்டார். இதனால் அல்கொய்தா குறித்து பாகிஸ்தான் ராணுவம் கவலைப்படவில்லை. அவர்கள் இந்தியா பற்றி மட்டுமே கவலைப்பட்டனர். ராணுவத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவும், பிரிவினைவாதிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஆதரித்த முஷாரப், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டார். கடந்த 2001 ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் மீது பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, 2002ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் அல்கொய்தா மற்றும் ஆப்கன் விவகாரத்தில் சிஐஏ முழு கவனம் செலுத்தி வந்ததால், இந்தியாவின் பிரச்னை பற்றி கவலைப்படவில்லை. துபாயில் அடைக்கலம் புகுந்து இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை சந்தித்தேன். அப்போது அவர் நாடு திரும்பினால், தனது கணவரால் கொல்லப்படுவேன் என அச்சம் கொண்டிருந்தார். பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி அப்துல் கதீர்கானை , இஸ்ரேல் பாணியில் அமெரிக்கா கொன்றிருக்க முடியும். ஆனால் அவர் சவுதி அரேபியாவின் அரசின் ஆதரவைப் பெற்றி ருந்தார். அந்நாடு எங்களிடம் அவரை விடும்படி கெஞ்சியது. இதனால், அவரை விட்டுவிட்டோம்.
ஆப்கனில் இருந்து பெண் வேடமிட்டு ஒசாமா பின்லேடன் தப்பினார்: ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,’ ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொல்லப்பட்டிருக்க வேண்டியவர் ‘ என்றார்.
