தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த ரூ.1.5 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் நேற்று பகல் 12 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்று விட்டு சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். அவர் மீது ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை, விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, உடைமைகளை பரிசோதித்தனர். அதற்குள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்களுக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 1.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: