திருமலை : ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஜலதாங்கி மண்டலத்தில் உள்ள சமதாலா கிராமத்தைச் சேர்ந்தவர் தம்புரு மல்லிகார்ஜூனா(45). இவரது மனைவி கோவிந்தம்மா. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், மல்லிகார்ஜூனா சமதாலா கிராமத்திலிருந்து காவாலிக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். இதற்கிடையில் கனமழையால் சாலையின் குறுக்கே செல்லும் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைபாலத்தை மூழ்கியபடி தண்ணீர் சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில், மல்லிகார்ஜூனா பைக்குடன் தரைபாலத்தை கடக்க முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து ஜலதாங்கி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.தகவலறிந்த எஸ்.ஐ சையத் லதி பன்னிசா சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்தார். மேலும், நீச்சல் வீரர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மல்லிகார்ஜூனாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. சுமார் 6 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு மல்லிகார்ஜூனா சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்தை கைப்பற்றிய ஜலதாங்கி போலீசார் பிரேத பரிசோதனைக்காக காவாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் சடலமாக மீட்கப்பட்டதை அறிந்த அவரது மனைவி கோவிந்தம்மா அங்கு வந்து கதறி அழுதார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கணவரின் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்து வந்த நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
