3 நாட்கள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!

டெல்லி: 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ஜோர்டான் புறப்பட்டார். இன்று (டிச.15) முதல் (டிச.18 ) வரை ஓமன், ஜோர்டான், எத்தியோப்பியாவுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார்.

மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உடனான இந்தியாவின் உறவுகளை மேலும் மேம்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அரசியல், பொருளாதார மற்றும் மக்களுக்கு இடையேயான பிணைப்புகளைப் பலப்படுத்துவது குறித்து இந்தச் சுற்றுப்பயணத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் மோடி, அப்துல்லா இப்ன் அல் ஹுசைன் அழைப்பின் பேரில் ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றுள்ளார். இந்தியா-ஜோர்டான் இராஜதந்திர உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்தப் பயணம் அமைந்துள்ளது.

அம்மான் நகரில், பிரதமர் ஜாஃபர் ஹசன் மற்றும் பட்டத்து இளவரசர் அல் ஹுசைன் பின் அப்துல்லா ஆகியோருடன் பிரதமர் மோடி விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாட இருக்கிறார்.

ஜோர்டானைத் தொடர்ந்து, பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் எத்தியோப்பியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் அமைய உள்ளது. ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் ஈடுபாடு விரிவடைந்து வரும் சூழலில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

பயணத்தின் இறுதிக் கட்டமாக, இந்தியாவுடன் 70 ஆண்டுகால உறவுகளைக் கொண்ட ஓமனுக்குப் பிரதமர் மோடி இரண்டாவது முறையாகச் செல்கிறார். மஸ்கட்டில், ஓமன் சுல்தான் ஹைத்தம் பின் தாரிக் அல் சையத்துடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையேயான மூலோபாயப் பங்காண்மை, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும்.

Related Stories: