குடும்ப நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி தேசியக் கொடியுடன் வாலிபர் தர்ணா திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திண்டுக்கல், டிச. 29: குடும்ப சொத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தேசியக் கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனி அருகே உள்ள கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் பாலமுருகன். இவரது தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டி பெயர்களில் கோதைமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தில் ஏராளமான ஏக்கர் நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும், அரசு தரப்பில் ஆதிதிராவிடர்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாலமுருகனின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அரசு புறம் போக்கு நிலத்தில் குடியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை கலெக்டர் மற்றும் பழனி தாசில்தாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து, பாலமுருகன் தேசியக்கொடியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘எங்களது இடத்தை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்க வேண்டும். அதேபோல் அரசு ஆக்கிரமித்துள்ள நிலத்தையும் எங்களிடம் கொடுக்க வேண்டும்’ என்றார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: