மன்னார்குடி, டிச.28: மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த 2002 ம் ஆண்டு முதல் இலக்கிய துறையில் இணையற்ற தமிழ் படைப்பாளரை பாராட்டி ரூ.50 ஆயிரம் ரொக்கமும், பொற்கிழியும், இலக்கிய விருதும் வழங்கி வந்தனர். கடந்தாண்டு முதல் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதுவரை, பதினெட்டு படைப்பாளர்கள் செங்கமலத்தாயார் இலக்கிய விருதினை பெற்றுள்ளனர். 2020ம் ஆண்டுக்கான இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் உத்தமசோழன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இலக்கிய விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி தாளாளர் டாக்டர் திவாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பேராசிரியை அமுதா முன்னிலை வகித்தார்.