திருச்சி அருகே திருட முயன்று தப்பியோடிய

திருச்சி, டிச. 26:  திருச்சி-கரூர் சாலை அல்லூர் அருகே சாய்விசாலாட்சி நகர் உள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை 2 மர்ம வாலிபர்கள், சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் ஒரு வீட்டில் திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டனர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட 2 மர்ம வாலிபர்களும் அங்கிருந்து தப்பியோடி வாழைத்தோப்புக்குள் புகுந்தனர்.இதுபற்றி தகவலறிந்த ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு அவர்களை விரட்டினர். இதில் 2 மர்ம வாலிபர்களும் ஆளுக்கொரு பக்கம் தலை தெறிக்க ஓடினர். அவ்வாறு ஓடும்போது கையில் கிடைத்த கட்டையால் பொதுமக்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒரு வாலிபரை விரட்டி சென்றபோது தடுமாறி அவர் கீழே விழுந்ததில் தலை, உடலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காயமடைந்த வாலிபரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தப்பியோடிய மற்றொரு வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து ஜீயபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும், சிக்கியவர் அரவிந்த்(25), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் திபூர்(30) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிக்கிய அரவிந்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த திபூர், சிகிச்சை பலனின்றி மதியம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: