நாகர்கோவில், டிச.26: குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டது. தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன. நடப்பாண்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு பெற்றுள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் மிகவும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நேற்று முன் தினம் நள்ளிரவில் கத்தோலிக்க தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த பிரார்த்தனையில் பிஷப் நசரேன் சூசை பங்கேற்றார். கொரோனா விதிமுறை காரணமாக ஆலயத்துக்குள் குறைவானர்களே அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். ஆலயத்துக்கு வெளியே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் பிரார்த்தனை செய்தனர். சிறப்பு பிரார்த்தனையில் பங்கு பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும், இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர். இதே போல் நேற்று காலை கோட்டார் பேராலயத்தில், பங்கு தந்தை ஸ்டான்லி சகாயசீலன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதிலும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.