சாத்தூர், டிச.26: சாத்தூர் பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. நேற்று காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது. சாத்தூர் பெருமாள் கோயிலில் வைப்பாற்றில் அழகர் இறங்குதல், ஆனி தேரோட்டம் மிக முக்கியமான திருவிழாவாகும். அதற்கு அடுத்தபடியாக மார்கழி மாதம் தமிழ் திருவிழாவாகிய பகல் பத்து, இராப்பத்து உற்சவம் வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு டிச.15ம் தேதி தொடங்கி 24ம் தேதி நேற்று முன்தினம் பகல்பத்து உற்சவம் நிறைவடைந்தது. இராப் பத்து உற்சவத்தின் ஆரம்ப நாளான நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா முழக்கத்துடன் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக பெரிய பெருமாள், தொடர்ந்து பூதேவி, ஸ்ரீதேவி எழுந்தருளினர். வருடம் ஒரு முறை மட்டுமே இந்த பரமபத வாசல் திறக்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.