சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால், தேவாலயங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சாந்தோம் தேவாலயத்தில் பொதுமக்கள் அதிகாலை வரை வழிபாடு நடத்தியதால் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், வாலிபர்கள் சிலர் நள்ளிரவில் உற்சாக மிகுதியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, அடையாறு மற்றும் ராஜிவ்காந்தி சாலைகளில் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, 100க்கும் மேற்பட்ட வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களில் 175 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூராக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், 50 பேர் மீது சாலையில் அபாயகரமாக வாகனம் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.