2021ல் யூடியூப் கணக்கை நீக்கிய விவகாரம்: அதிபர் டிரம்புக்கு ரூ.212 கோடி இழப்பீடு வழங்குகிறது கூகுள்!

கலிஃபோர்னியா: அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பின் கணக்கை நீக்கிய விவகாரத்தில் அவருக்கு ரூ.212 கோடி இழப்பீடு வழங்க கூகுளின் யூடியூப் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்தார். இதைதொடர்ந்து டிரம்ப் ஆதரவாளர்கள் 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடம் மீதான தாக்குதலை நடத்தினர். இதனால் டிரம்பின் சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் டிரம்பின் யூடியூப் பக்கமும் இடைநீக்கம் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து டிரம்ப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை கலிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கினை சுமூகமாக முடித்து கொள்ள அதிபர் டிரம்புக்கு 24.5 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பீட்டில் சுமார் 212 கோடி ரூபாயை இழப்பீடாக செலுத்த யூடியூபின் தாய் நிறுவனமான கூகுள் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 6ம் தேதி பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் கணக்கை நீக்கியதற்கு இழப்பீடு வழங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: