சிறுமியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய கும்பல்

மதுரை, டிச. 25: மதுரையில் 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் 5 பெண் புரோக்கர்கள் உள்பட 7 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுமியை பாலியலில் ஈடுபடுத்தியவர்கள் அனைவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமி கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர். பெற்றோரை இழந்த இவரை, கடந்த 2015ல் சிறுமிக்கு 10 வயது இருக்கும் போது, ஜெயலட்சுமி என்பவர் கூட்டிச் சென்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், 13 வயதில் சிறுமி வயதுக்கு வந்தார். இதனையடுத்து, ஏற்கனவே பாலியல் தொழில் செய்துவந்த ஜெயலட்சுமி, சிறுமியையும் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தி, அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளார்.

கைதானவர்களில் ஜெயலட்சுமியும் ஒருவராவர், ஏற்கனவே ஆள் கடத்தல், மற்றும் விபச்சார வழக்குகளில் இவர் தேடப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளி வரும் கும்பல் குறித்த விசாரணையை தனிப்படை போலீசார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

Related Stories: