திமுக சார்பில் கிராம சபா கூட்டம் அதிமுக ஆட்சியில் சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

திருவண்ணாமலை, டிச.24: சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த உதவிகளையும் அதிமுக ஆட்சியில் செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் கிராமத்தில், அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் கிராம சபா கூட்டம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர் மெய்யூர் சந்திரன் வரவேற்றார். அப்போது, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியின் அவலங்கள் அனைத்தும், கிராமங்களில் உள்ள மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்திருக்காது என்பதற்காக, இதுபோன்ற கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது.

திமுக ஆட்சியில் ₹7 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்தோம். ஆனால், தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில் சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என திமுக சார்பில் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடன் தள்ளுபடி செய்யவில்லை. எனவே, இந்த ஆட்சியை நிராகரிக்கிறோம்.விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அதிமுக ஆதரிக்கிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அத்தியாவசிய உணவு பொருட்கள் பதுக்கல் நடைபெறும். பட்டினி சாவு ஏற்படும். எனவே, இந்த அரசை நிராகரிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, சமுத்திரம், நல்லவன்பாளையம் பகுதிகளில் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர்களுக்கு தொப்பி, துண்டு பிரசுரம், பாக்கெட் நாள்காட்டி ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வழங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அதிமுகவை நிராகரிக்கிறோம் எனும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார், கணேஷ், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: