க.பரமத்தி, டிச.24: தைப்பொங்கலுக்காக சாகுபடி செய்த மஞ்சள் பயிர்கள் கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதியில் நன்கு வளர்ந்துள்ளது. அறுவடை காலத்தில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மற்றும் க.பரமத்தி அகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதியில் தைப்பொங்கலுக்காக சாகுபடி செய்த மஞ்சள் பயிர் நன்கு வளர்ந்து வருகிறது. க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட ராஜபுரம், சின்னதாராபுரம், அஞ்சூர், கார்வழி, மொஞ்சனூர், விஸ்வநாதபுரி, கோடந்தூர், உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கரூர் ஒன்றியத்தில் வேட்டமங்கலம், கோம்புபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட இடங்களில் மஞ்சள் பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கிணற்று மற்றும் ஆற்று பாசனத்தை நம்பி இரு ஒன்றிய பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது.