துறையூர், டிச.21: துறையூர் அருகே வெங்காயம் பயிர் சேதமானதால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். துறையூர் வட்டாரத்தில் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் தொடர் மழையாலும், திருகல் நோய் தாக்கியும் அழுகி சேதமானது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செல்லிப்பாளையம் ஈச்சமரம் பஸ் ஸ்டாப் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்லிப்பாளையம் மனோகரன் தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி சீனிவாசன், அரவிந்தன், மருவத்தூர் ரெங்கராஜ், பாலகிருஷ்ணன், ராஜகோபால், பிரபாகரன் உள்ளிட்ட விவசாயிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் செல்லிபாளையம், மருவத்தூர், அம்மம்பாளையம், வேங்கடத்தனூர், நரசிங்கபுரம், செங்காட்டுப்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.