சாயல்குடி, டிச.21: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடந்து வருவதால் தடுத்து நிறுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் சலீம் முல்லாகான் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. குறைந்த செலவில் அதிக போதையை தரும் போதை வஸ்து என்பதால் இளைஞர்கள் இதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே மாவட்டத்தில் கஞ்சாவை முழுமையாக ஒழிக்க எஸ்.பி கார்த்திக் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்கடை பஜார், பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் நிரம்பி வழிந்தோடி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடு நிலவு வருகிறது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.