பாடாலூர், டிச.18: ஆலத்தூர் கேட் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் செட்டிகுளம் இணைப்பு சாலையும், கொளக்காநத்தம் செல்லும் இணைப்பு சாலையும் அருகருகே உள்ளது. அதிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம், ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் என்பது உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக பணிகளுக்காக நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர் ஆலத்தூர் தாலுகாவின் கிழக்கு பகுதியில் உள்ள காரை, தெரணி கொளக்காநத்தம் கொளத்தூர் அயினாபுரம் இலுப்பைக்குடி கூடலூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும், அதேபோல் ஆலத்தூர் தாலுகாவில் மேற்கு பகுதியான நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவிலங்கை, சிறுவயலூர், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது உள்ளிட்ட அலுவலக பயன்பாட்டுக்காக நாள்தோறும் ஆலத்தூர் கேட் பகுதிக்கு வந்து தான் செல்ல வேண்டும்.
மேலும் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆலத்தூர் கேட் பகுதிக்கு வந்துதான் செல்ல வேண்டும். இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் திருச்சி-சென்னை போன்ற தொலைதூர நகரங்களுக்கு சென்று வரும்போது ஆலத்தூர் கேட் பகுதியில் இறங்கி தங்களது கிராமங்களுக்கு செல்லும் பஸ்சுக்காக இந்த பகுதியில் காத்திருக்கின்றனர். அதேபோல் செட்டிகுளம் கிராமத்தில் நடைபெறும் தைப்பூச திருவிழா மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா காலங்களில் பொதுமக்களும் பக்தர்களும் அதிகளவில் ஆலத்தூர் கேட் பகுதி வந்துதான் செட்டிகுளம் சென்று வருகின்றனர்.
இதுபோல் பல்வேறு பணிகளுக்காகவும் வந்து செல்லும் பயணிகளும், பொதுமக்களும் குழந்தைகளும் நீண்ட நேர பயணத்திற்குப் பின் இந்தப் பகுதியில் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலையில் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பொது இடங்களில் திறந்தவெளியில் தங்கள் இயற்கை உபாதை கழிக்கும் போது அது மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. எனவே இந்த பகுதிக்கு வந்து செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் வசதியுடன் கூடிய இலவச சுகாதார வளாகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.