திருச்சி: கூட்டணி என்கிற வார்த்தைக்குள் நாங்கள் செல்லவில்லை. எடப்பாடி டிராக் வேறு, எங்களின் பயணம் வேறு என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி வேறு டிராக்கில் மக்களை சந்திக்கிறார். நாங்கள் எங்கள் கட்சியின் செயல்பாடுகளின் அடிப்படையில் பயணம் செய்கிறோம். எங்கள் பயணம் வேறு, அவரின் பயணம் வேறு. தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம். அதுவரை எங்கள் கட்சி வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துவோம். ஜனவரி 9ம் தேதி வரை காத்திருங்கள்.
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கூட்டணி ஆட்சியை தேமுதிக வரவேற்கிறது. அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும்போது இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. அது செயல்படுத்தும்போது தான் அதன் நிறை, குறைகள் தெரியும். தேமுதிகவுடன் அனைத்து கட்சியினரும் நட்போடு தான் பழகி வருகின்றனர். ஆனால் கூட்டணி என்கிற வார்த்தைக்குள் நாங்கள் செல்லவில்லை. ஜனவரி 9ம் தேதி தான் அதற்கான விடை தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
