சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (3ம் தேதி) மாலை நெல்லை செல்கிறார். பாளையங்கோட்டையில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இருந்து இன்று தென் மாவட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (3ம் தேதி) வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் செல்கிறார்.
மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை தெற்கு பைபாஸ் சாலையில் சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உள்ள மைதானத்தில் நடக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வஹாப், நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். மேலும் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு திரட்டுகிறார்.
நெல்லை பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு கன்னியாகுமரி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு அங்குள்ள அன்னை ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், பத்மநாபபுரம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
