ரூ.174 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 19 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், நிலைய கட்டிடங்கள் திறப்பு

சென்னை: ரூ.173.86 கோடி செலவில் 19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், 3 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டிடங்கள், தொழிலாளர் ஆணையரகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகக் கட்டிடம் மற்றும் சிங்காரவேலர் ஓய்வு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.128 கோடியே 55 லட்சம் செலவில், செஞ்சி, மரக்காணம், திசையன்விளை, ஏம்பல், சாலவாக்கம், செம்பனார்கோவில், தா.பழூர், திருஉத்திரகோசமங்கை, மணப்பாறை, காங்கேயம், குருக்கள்பட்டி, திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பரங்குன்றம், மண்ணச்சநல்லூர், பேரூர் மற்றும் காரிமங்கலம் ஆகிய 19 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பெரும்பாக்கம், ஒட்டன்சத்திரம் மற்றும் கடலாடி ஆகிய இடங்களில் ரூ.17 கோடியே 64 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள் ஆகியவற்றை ஒரே நாளில் வரலாற்று சாதனையாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொழிலாளர் துறை சார்பில் ரூ.27 கோடியே 67 லட்சம் செலவில் சென்னை அண்ணா நகரில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் ஆணையரக அலுவலகக் கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள், வால்பாறையில் கட்டப்பட்டுள்ள சிங்காரவேலர் ஓய்வு இல்லம் ஆகியவற்றை முதல்வர் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ரகுபதி, சாமிநாதன், சிவசங்கர், கணேசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் வீர ராகவ ராவ், தொழிலாளர் துறை ஆணையர் ராமன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன், பவர் கிரிட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருச்சிற்றம்பலம் கிருஷ்ணகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: