வேலூர், டிச. 11: வேலூர் மத்திய சிறையில் போலீசார் மீது பாட்டில், துடைப்பம் வீசி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முருகன் அறையில் தங்கியுள்ள மற்றொரு கைதி மீது சிறை காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் சிறைக்காவலர்கள் சோதனையிட நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, அவர்களை முருகன் தடுத்து நிறுத்தி உள்ளார். மேலும் அறையிலிருந்து தண்ணீர் பாட்டில், துடைப்பம் ஆகியவற்றை சிறை காவலர் மீது முருகன் வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை ஜெயிலர் பாகாயம் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் சிறை போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.