கீழக்கரை: நாடு முழுவதும் அமலாக்கத் துறையால் சோதனை நடத்தப்பட்டு ஹவாலா கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மற்றும் நத்தம் அருகேயுள்ள கிராமங்களில் ஹவாலா பண பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாக 4 பேரை அமலாக்க துறையினர் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கும்பல் நூதன முறையில் கிராமங்களில் உள்ள வயதான முதியவர்களின் வங்கி கணக்கு மற்றும் அவர்களின் ஏடிஎம் கார்டுகளை வாங்கி வைத்துள்ளனர். பின்னர் அந்த கணக்குகள் மூலம் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை செய்துள்ளனர். இதற்காக வங்கி வாடிக்கையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 வழங்கி
வந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது பிடிபட்டவர்கள் ஹவாலா பணத்தை டெலிவரி செய்பவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் மூலம் யார் யார் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
