நூற்றாண்டு பிறந்த நாள் மக்களின் பசியாற்றிய எம்.எஸ்.சுவாமிநாதன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாள் இன்று. தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசு தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனுடன் இணைந்து, அங்குள்ள ஜெஆர்டி டாடா சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தை திறந்தும் வைத்தார் அன்றைய முதல்வர் கலைஞர்.

அவரது வழியிலான நமது திராவிட மாடல் அரசும், போரூர் வெட்லேண்ட் பார்க், தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டியுள்ளதோடு, பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவை போற்றி வருகிறோம். காலநிலை மாற்றம் உள்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களை பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான எம்.எஸ்.சுவாமிநாதன் அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்கு பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன். தந்தையின் பணியையும் – புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதன் பணி சிறக்கவும் வாழ்த்துகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: