உளுந்தூர்பேட்டை, டிச. 4: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது மட்டிகை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை பயன்படுத்தி மட்டிகை, வானாம்பட்டு மற்றும் இதனை சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மட்டிகை ஏரி நிரம்பி வந்த நிலையில் நேற்று ஏரியில் இருந்து 2 மதகுகளின் வழியாக மழைநீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இதுகுறித்து இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறும் போது, ஒவ்வொரு மழையின் போதும் இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறி வருகிறது. முன்கூட்டியே ஏரியை ஆழப்படுத்த வேண்டும், தண்ணீர் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், மதகு உயரத்தை உயர்த்திட வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது பெய்த மழைநீர் அனைத்தும் ஏரியில் போதிய ஆழம் இல்லாததால் தண்ணீர் வெளியேறி வருகிறது.