30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் குடிநீர், கழிவுநீரகற்று வரிக்கு மேல்வரி விதிக்கப்படும்: குடிநீர் வாரியம் எச்சரிக்கை

சென்னை, செப். 28: குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வரும் 30ம்தேதிக்குள் செலுத்தாவிட்டால், மேல் வரி விதிக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் கடைசி நாளான செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தி மேல்வரியினை தவிர்த்திட வேண்டும். வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் இயங்கும்.

சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை காசோலை மற்றும் வரைவோலைகளாக செலுத்தும் நுகர்வோர்களின் வசதிக்காக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் பணிமனை அலுவலகங்களில் காசோலை, வரைவோலை பெறுவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. எனவே, நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக பணம் செலுத்தலாம். இ-சேவை மையங்கள் மற்றும் யூபிஐ, க்யூஆர் கோடு, பிஓஎஸ் போன்ற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் வரும் 30ம்தேதிக்குள் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடியாக செலுத்தி சென்னைக் குடிநீர் வாரியத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 30ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் குடிநீர், கழிவுநீரகற்று வரிக்கு மேல்வரி விதிக்கப்படும்: குடிநீர் வாரியம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: