ஈரோடு, மார்ச் 20: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினை தடுக்க மாநில எல்லைப்பகுதியில் உள்ள 2 சோதனை சாவடி உட்பட 13 சோதனை சாவடிகளிலும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாநில வாகனங்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.இதுகுறித்து எஸ்பி சக்திகணேசன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கர்நாடகா மாநில எல்லைப்பகுதியில் ஆசனூர் சோதனை சாவடி, பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சோதனை சாவடி மற்றும் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுகாதார துறை அதிகாரிகளுடன், போலீசார் இணைந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பிற மாநிலத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களுக்கு சுகாதாரத்துறையினர் கிருமிநாசினிகளை தெளித்து, வாகனங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா? என பரிசோதிக்கின்றனர். வாகனங்களில் உள்ளவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள், எதற்காக மாவட்டத்திற்குள் வருகிறார்கள் என விசாரணை நடத்திய பிறகே போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர்.