மகாமாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த தடை

வலங்கைமான், மார்ச் 20: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வரும் 22ம்தேதி நடைபெற இருந்த பங்குனி பாடைக்காவடி திருவிழா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செழுத்த தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி வரதராஜம் பேட்டைத் தெருவில் கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் சக்திஸ்தலம் என பக்தர்களால் அழைக்கப்படும் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை லட்சகணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் பாடைக்காவடி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 8ம்தேதி முதல் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றதை அடுத்து நேற்று 15ம் தேதி இரண்டாவது காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து மாலை அம்மன் வீதியுலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாடைக்காவடி திருவிழா வரும் 22ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் பாடைக்காவடி திருவிழாவும், மார்ச் 29ம் தேதி புஷ்ப பல்லாக்கும், ஏப்ரல் 12ம் தேதி கடை ஞாயிறு விழாவும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் கடந்த 18.03.20 முதல் திருக்கோயிலில் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சில பக்தர்கள் தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.

அதனையடுத்து வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தெய்வநாயகி தலைமையில் மாரியம்மன் கோயில் அலுவலர்களுடன் நேற்று அதிகளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதில் பாடைக்காவடி திருவிழா ஒத்திவைக்கப்ட்ட நிலையில், பக்தர்கள் பாடைக்காவடி, அலகுகாவடி, தொட்டில்காவடி, பறவைகாவடி, பால்காவடி, அங்கபிரதட்சனம், மாவிளக்கு போடுதல், முடிகாணிக்கை செழுத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செழுத்த தற்காலிகமாக அனுமதியில்லை. மேலும் ஆலயத்தில் திருமணம் செய்தல், காதுகுத்துதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றிற்கு அனுமதியில்லை என முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க சிறப்பு பேருந்துகள் ரத்து செய்வதற்கும், தரைக்கடை போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்படாமலும், ராட்டினம், சர்க்கஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் அனுமதி அளிப்பதற்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தகவல் அளிக்க அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் செயல் அலுவலர் சிவக்குமார், தக்கார் ரமணி, தலைமை பூசாரி செல்வம், ஆலய நிர்வாகி சீனிவாசன் உள்ளிட்ட ஆலய பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: