ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில் 500 கிலோ கொடுவா மீன் பிடிக்கப்பட்டது

காரைக்கால், மார்ச் 19: காரைக்கால் ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில், 500 கிலோ கொடுவா மீன் பிடிக்கப்பட்டது. காரைக்கால் கருக்களாச்சேரி கிராமத்தில் இயங்கிவரும் ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில், கடந்த ஓராண்டாக வளர்க்கப்பட்ட கொடுவா மீன் நேற்று, மீன் விவசாயிகள் முன்னிலையில் பிடிக்கப்பட்டது. ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மைய தலைவர் சீனிவாசு தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, மீன்வளத்துறை இணை இயக்குனர் கவிநேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறியாதவது: இந்த பண்ணையில் மீன்கள் ஆரம்பம் முதல் ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறது. மீன் விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த முறையில் மீன் வளர்ப்பு குறித்து பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மீன் விவசாயிகள் தங்கள் இடத்தில் இதுபோன்று மீன்களை வளர்த்து லாபம் ஈட்ட முன்வரவேண்டும் என்றார்.

கிலோ ரூ.420க்கு விற்பனை

மையத்தின் உதவி திட்ட மேலாளர் முனைவர் தினகரன் கூறியது: ராஜிவ்காந்தி நீர்வாழ் ஊயிரின வளர்ப்பு மையத்தில், சீர்காழியை அடுத்த தொடுவாய் கிராமத்திலிருந்து 4 செ.மீ அளவில் கொடுவா மீன் குஞ்சு கொண்டுவந்து, எங்கள் மையத்தில் கூண்டு முறையில் வளர்த்து, 15 செ.மீ மீட்டர் அளவு வளர்ந்தவுடன், அதனை வேறு பெரிய கூண்டு அல்லது பண்ணை குட்டையில் விட்டுவிடுவோம். குறிப்பிட்ட கால இடைவெளியில் வளர்க்கப்பட்ட மீன் மற்றும் நண்டுகள் அறுவடை நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு அறுவடை நடைபெறுகிறது. ஒவ்வொரு மீனும் 1 கிலோ முதல் 2 கிலோ வரை உள்ளது. முதல் கட்டமாக சுமார் 500 கிலோ மீன் பிடிக்கப்பட்டது. கிலோ ரூ.410 முதல் 420 வரை வெளிமாநில மீன் வியாபாரிகளிடம் மொத்தமாக விற்பனை செய்துள்ளோம். இன்னும் 2 வாரம் சென்று அடுத்த கட்ட அறுவடை நடைபெறும் என்றார்.

Related Stories: