திருவள்ளூர் ஈக்காடு அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருவள்ளூர், மார்ச் 19: திருவள்ளூர் நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சமயத்தில், வெள்ளியூரில் இருந்து திருவள்ளூருக்கு வரும் குடிநீர் பைப்லைன், ஈக்காடு சர்ச் அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில், 211 தெருக்கள் உள்ளன. இங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி மூலம் தினமும் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதற்காக வெள்ளியூரில் ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்கப்பட்டு, 35 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது. இவற்றை, நகரின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட், 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து, தெரு குழாய்கள், வீட்டு இணைப்பு குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர் குறைவால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. நிலைமை இப்படியிருக்க, வெள்ளியூரில் இருந்து வரும் தண்ணீர் குழாயில், ஈக்காடு சர்ச் அருகே உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.

இதுகுறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறுகையில்,’’செங்குன்றம் - திருவள்ளூர் சாலை ஆரம்பத்தில் 40 அடி சாலையாக இருந்தது. இதனால், வெள்ளியூரில் இருந்து, நகராட்சிக்கு குடிநீர் குழாய் சாலையோரம் பதிக்கப்பட்டது. தற்போது, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால், குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பகுதி சாலையின் நடுவில் வந்து விட்டது. அழுத்தம் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. அவ்வப்போது நாங்கள் சரிப்படுத்தி வருகிறோம். இதையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை ஈடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: