கலெக்டரிடம் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மனு பலி வாங்க துடிக்கும் சிதிலமடைந்த சுகாதார நிலையம்

முத்துப்பேட்டை, பிப்.25: முத்துப்பேட்டையில் தற்பொழுது உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அரசு மருத்துவமனையாக இருந்தது. அதன் பிறகு 1988ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாறியது. இருந்தாலும் அரசு மருத்துவமனைக்கு உள்ள அனைத்து வசதிகளும் தொடர்ந்து இருந்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக தரம் குறைந்து 2001-ம் ஆண்டில் பிரேத பரிசோதனை வசதியையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கொதிப்படைந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன் தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று அன்று முதல் இன்று வரை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இன்று வரை மாறவில்லை.

இந்தநிலையில் மக்கள் கோரிக்கைக்கு ஆறுதலாக சில வருடங்களுக்கு முன் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக அரசு அறிவித்தது. ஆனால் கூடுதலாக எந்தவித வசதிகளையும் சுகாதாரத்துறை இங்கு செய்யவில்லை.

இதற்கிடையில் கடந்த திமுக ஆட்சியில் பழுதடைந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டித்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்பொழுது கட்டுமான பணி துவங்க அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்பட்டன. ஆனால் அந்த வளாகத்தில் நோயாளிகள் தங்கும் பழமையான வார்டு கட்டிடம் மட்டும் இடிக்காமல் சிமென்ட் குடோனாக பயன்படுத்தி வந்தனர். கட்டிட பணி முழுமையாக முடிந்து புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டித்தை திறந்த பிறகும் இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடுக்காமல் அந்த கட்டிடத்தில் மருத்துவமனைக்கு தேவையற்ற பொருட்களை போட்டு வைத்திருந்தனர். மேலும் சுற்றுப்புற வியாபாரிகளின் பொருட்கள் வைக்கும் கூடாரமாக இருந்தது. மேலும் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை அறியாமல் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பழமையான கட்டிடத்தின் படியில் உட்கார்ந்து ஓய்வு எடுத்து வந்ததால் இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுக்கொள்ளவில்லை. இந்தநிலையில் 2018ம் ஆண்டு நவம்பர் 16ம்தேதி இப்பகுதியை தாக்கிய கஜா புயலின் கோரத்தாண்டவத்திற்கு இந்த பழமையான கட்டிடம் சின்னாபின்னமாகியது. இன்று வரை இந்த சேதமான கட்டிடத்தை இடிக்க அரசு மருத்துமனை நிர்வாகம் அலச்சியம் படுத்திவிட்டு, இன்னும் அப்படியே காட்சி பொருளாக வைத்துள்ளது. தற்பொழுது இந்த கட்டிடம் விஷ ஜந்துக்களின் கூடாரமாக விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவருடன் வரும் மக்கள், அதேபோல் அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளதால் அங்கு வரும் வெளியூர் பயணிகள் இந்த இடிபாடுகளுடன் உள்ள கட்டிடத்தின் அருகில் தான் நிழலுக்கு ஓய்வு எடுத்து வருகின்றனர். எனவே பலரது உயிர்பலியை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த கட்டிடத்தை இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: