சத்தியமங்கலம், பிப். 25: சத்தியமங்கலம் அருகே சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் மேட்டூரிலிருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக சாலையில் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே சிறுத்தை ஓடியதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது திலகவதி மற்றும் தங்கவேல் ஆகியோரது விளைநிலங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததை உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.