சிவகங்கை, பிப்.25: நெல் கொள்முதல் நிலையங்களில் வசூல் செய்த பணத்தை விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத அறுவடைப்பணி முடிந்த நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடம் 40 கி.கி கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.760க்கு பெறப்படுகிறது. நெல்லை சுத்தம் செய்வதற்கென ஒரு மூட்டைக்கு ரூ.32முதல் ரூ.40வரை வசூல் செய்யப்படுகிறது. சுத்தம் செய்வதற்கென அரசு சார்பில் இயந்திரம் வழங்கப்பட்டும் சுத்தம் செய்ய கூடுதலாக பணம் வசூல் செய்கின்றனர். நெல் மூட்டையை எடை வைக்கவும் வசூல் செய்யப்படுகிறது. சுத்தம் செய்ய, எடை போட, மூட்டையை அடுக்கி வைக்க, ஏற்றி இறக்க, மூட்டை தைக்க என அரசு சார்பில் ஒரு மூட்டைக்கு ரூ.26 வழங்கப்படுகிறது.