விருதுநகர், பிப்.25: பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை அமல்படுத்தகோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.சிவகாசி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறி மற்ற ஒன்றிய பள்ளிகளில் பணி நிரவல் செய்யப்பட்டனர். இந்த பணி நிரவல் கடந்த கால நடைமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில் இடைக்கால உத்தரவு 19.9.2019ல் வழங்கப்பட்டது. பின் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அரசு பணி நிரவல் செய்தது சரி என கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். அது தொடர்பான இருநீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 6.2.2020ல் தனிநீதிபதி அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவிட்டது.