திருநின்றவூர், பிப்.25: திருநின்றவூர், வேப்பம்பட்டு பகுதியில் வீடு முன்பு நிறுத்திய இருசக்கர வாகனங்களை திருடிய 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர்.ஆவடியை அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (51). இவர், கடந்த நவம்பர் மாதம், பிரகாஷ் நகர் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பைக்கில் வந்த 5பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர், அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றது.
புகாரின் அடிப்படையில் திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். விசாரணையில், திருநின்றவூர், கணபதி நகரை சேர்ந்த சதீஷ் (18), பாக்கம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அஜித் (19), நடுக்குத்தகை, கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரியாஸ் (18), திருநின்றவூர், நாசிக் நகர் பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விக்கி (19), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (21) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர், அவர்களை திருநின்றவூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.