வருசநாடு, பிப். 21: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்பில் உள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெரியகுளம், செங்குளம், கெங்கன்குளம், பஞ்சம்தாங்கி கண்மாய், சாந்தநேரி கண்மாய், கண்டமனூர் பெரியகுளம் கண்மாய், இலந்தைகுளம் கண்மாய், அம்மாகுளம், கோவிலாங்குளம், கோவில்பாறை கண்மாய் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இப்பகுதி கண்மாய்களில் தனிநபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இது தொடர்பான புகாரின்பேரில், சில மாதங்களுக்கு முன்பு, சில கண்மாய்களில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கண்மாய்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகள் ஆண்டுதோறும் நடப்பதாகவும், முழுமையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.