சேலம், பிப்.21: மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், சேகோ ஆலை அதிபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
மரவள்ளி கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்த முத்தரப்பு ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை வகித்து பேசியதாவது: மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், சேகோசர்வ் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்து, பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, நடப்பாண்டு 6991 ஹெக்டேரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பராம்பரிய பயிராக சாகுபடி செய்து வரும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதை பிரதான பொருளாக விவாதிக்கப்பட்டது.