அறந்தாங்கி, டிச.5: அறந்தாங்கி அருகே பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்யப்பட்டிருந்த 30 ஏக்கரில் செங்கரும்புகள் அடியோடு சாய்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம் கீழ்பாதி பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் பயன்படுத்தும் செங்கரும்பு சாகுபடி செய்து இருந்தனர். 12 மாத பயிரான செங்கரும்பை கடந்த ஜனவரி மாதம் நடவு செய்த விவசாயிகள் வரும் ஜனவரி மாதம் அறுவடை செய்வதற்கு தயாராக இருந்தனர். செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு வயலிலும், மையத்தில் இருந்த கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக வயலின் மையப்பகுதியில் 30 ஏக்கரில் நன்கு வளர்ந்திருந்த செங்கரும்புகள் அடியோடி சாய்ந்து போய்விட்டன. சாய்ந்த கரும்பை தற்போது விற்பனை செய்ய வழியில்லாததால், அவை வயலிலேயே காய்ந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், உடனடியாக பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின் துயர்துடைக்க உடனடியாக தொடர்மழையால் பாதிக்கப்பட்ட செங்கரும்பு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, பொங்கல் பரிசு தொகுப்பிற்காக செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.