பள்ளிகளில் ஈரப்பத சுற்றுச்சுவருக்கு தடுப்புகள் கட்டாயம் மாணவர்களையும் அனுமதிக்க கூடாதென அறிவுரை

குஜிலியம்பாறை, டிச. 4: பள்ளிகளில் ஈரப்பத சுற்றுச்சுவருக்கு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன், மாணவர்களையும் 20 அடி தொலைவு வரை அனுமதிக்க கூடாதென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கென ஆய்வு அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில்,

1. தொடர்மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

2. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருந்தால், அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டி வைப்பதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

3. மின்இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின்கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தேவையெனில் மின்இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேரங்களில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்பு கொண்டு இதனை சரிசெய்திட வேண்டும்.

4. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்வதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

5. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்த்திட அறிவுரைகள் வழங்கிட வேண்டும். மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நீர்நிலைகளில் அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன் பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்.

6. மாணவர்கள் மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும் போது திரும்பி செல்லும் போதும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அவ்வழியினை தவிர்த்திட வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

7. பள்ளியை விட்டு வெளியே செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகில் செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

8. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.

9. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும்.

10. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

11. பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்தம் உள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

12. சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

13. மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.

14. பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையின் மழைநீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கிய நீரை அப்புறப்படுத்த வேண்டும்.

15. பள்ளி வளாகத்தில் கட்டட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கவும் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

16. பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக அறிவுரைகளை ஏற்கனவே அறிவுறுத்தியபடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

17. துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் பள்ளி வளாகத்தினை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

18. மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள 18 கட்டளைகளை, தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: