மன்னார்குடி, நவ.14: டெல்லியில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட பள்ளி சிறுவர்களுக்கான 65வது தேசிய ஆண்கள் கபடி போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க வுள்ள வீரர்களுக்கு வடுவூரில் நடைபெற்று வந்த பயிற்சி முகாம் நிறைவடை ந்ததையொட்டி தமிழக வீரர்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் 65வது அகில இந்திய அளவிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் கபடி போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்பதற்கு தேர்வாகியுள்ள அணிக்கு பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக வடுவூர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு வடுவூர் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சேகர் பயிற்சியளித்தார்.