சிதம்பரம், நவ. 14: சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் புறவழிச்சாலை வழியாக கடலூருக்கு பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் இருந்து சி.முட்லூர் வழியாக பு.முட்லூர் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மதுரை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட தொலைதூரத்தில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகள் கூட புவனகிரி சுற்றி செல்வதால் நேர விரயமாவதாக நீண்ட தூர பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், எஸ்பி அலுவலகம், பள்ளி கல்வித்துறை அலுவலகம், தேர்வுத்துறை அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளன. இந்த அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்வேறு அலுவல்களுக்காக ஏராளமானோர் சென்று வருகின்றனர்.