சின்னமனூர், நவ. 14: சின்னமனூரில் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நுழைந்து நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சின்னமனூர் பகுதிகளில் முதல் போகத்திற்கான நடவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது இரண்டு மாத பயிராக நெற்பயிர்கள் தீவிரமாக வளர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாற்றின் பாசனநீரை நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் முறை வைத்து நான்காயிரம் ஏக்கர் வயல் வெளிகளுக்கு பிரித்து அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால், ஆங்காங்கே வயல்வெளிகளில் மழைநீர் புகுந்து நிலத்தில் தேங்கி வருகிறது.