பூந்தமல்லி, நவ. 14: போரூரில் இருந்து திருவேற்காடுக்கு பயணம் செய்தபோது ஆட்டோவில் தவறவிட்ட நகையை மறைத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 9 சவரன் நகை மீட்கப்பட்டது.தென்காசியை சேர்ந்தவர் சேவியர் (42), கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவேற்காட்டில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தார். போரூரில் இருந்து ஆட்டோவில் திருவேற்காடு சென்றார். அப்போது, அவர் கொண்டு வந்த பையை ஆட்டோவில் தவற விட்டார். அதில், 9 சவரன் நகைகள் இருந்ததாக திருவேற்காடு போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு தலைமையில் திருவேற்காடு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆட்டோவை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் ஆட்டோவின் நம்பர் முழுமையாகத் தெரியாததால் அந்த ஆட்டோவில் ஒட்டப்பட்டிருந்த பச்சையம்மன் துணை மற்றும் ஸ்டிக்கர்களை கொண்டு ஆட்டோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.